நடு வீதியில் மனைவியை வாளினால் வெட்டிய கணவன்!!
யாழ். நகரின் மத்தியில் வைத்து மனைவியை கணவன் வாளினால் சரமாரியாக வெட்டியதில் இன்று (22) காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற இச் சம்பவத்தில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த நிஷாந்தினி (வயது 24) எனும் யுவதியே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார். இவருக்கு திருமணமாகி குடும்ப தகராறு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
புங்குடுதீவில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்றைய தினம் பஸ்ஸில் வேலைக்காக வந்து யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து தாதியர் பயிற்சி கல்லூரிக்கு வைத்தியசாலை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த போதே கணவன் வீதியில் வைத்து சரமாரியாக வாளினால் வெட்டியுள்ளார்.
அதையடுத்து படுகாயமடைந்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating