கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றி திரிந்த ஆந்திர இளம்பெண்!!
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ஒரு இளம்பெண் தனியாக சுற்றிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்ததை கண்ட ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அதற்கு அவர் தனக்கு தமிழ் தெரியாது என்றும், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழி மட்டுமே தெரியும் எனவும் கூறினார். இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை கன்னியாகுமரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெரால்டின் வினு, ஜான்போஸ்கோ ஆகியோர் தெலுங்கு தெரிந்த போலீசார் உதவியுடன் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
இதில் அந்த பெண் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பே கன்னியாகுமரி வந்தது தெரியவந்தது. சர்ச் ரோடு பகுதியில் சுற்றி கொண்டிருந்த போது அங்குள்ள ஒரு கடைக்கு பொருள்கள் வாங்க வந்த மீனவ பெண் ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்க அவர் இரக்கப்பட்டு இளம்பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து சென்று அவருக்கு உணவு கொடுத்ததோடு வீட்டிலும் இடம் கொடுத்து தங்க வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த இளம்பெண் நேற்று ரெயில் நிலையத்திற்கு வந்த போது தான் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவருக்கு அடைக்கலம் கொடுத்த மீனவ பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திர போலீசாருக்கு தகவல் தெரிவித்து இளம் பெண்ணின் பெற்றோர் யார் என விசாரிக்க ஏற்பாடு செய்தனர்.
அதுவரை ஆந்திர இளம்பெண்ணை தக்கலை அருகே உள்ள ஒரு காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
Average Rating