அசாமில் பழங்குடியின மக்கள் மீது போடோ தீவிரவாதிகள் கோழைத்தனமான தாக்குதல்: 55 பேர் பலி!!
அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பழங்குடியின மக்கள் 55 பேர் பலியானார்கள்.
ஒரு மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் ஈவு இரக்கமின்றி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.
இது போன்ற தீவிரவாத தாக்குதல் மற்றும் வன்முறையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அதே போல் இத்தாக்குதல் கோழைத்தனமான செயல் என பிரதமர் மோடியும் கண்டித்துள்ளார்.
சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் 27 பேர் கொல்லப்பட்டனர். அதில் 10 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள். இத்தாக்குதலில் தப்பிய அப்பாவி மக்கள் கூறுகையில், தீவிரவாதிகள் தங்கள் குடிசையை தட்டி திறக்குமாறு மிரட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சிலரை வீட்டை விட்டு வெளியே இழுத்து நெற்றியில் வைத்து துப்பாக்கியால் சுட்டனர் என்று அதிர்ச்சி விலகாமல் கூறினர்.
இந்த தீவிரவாத சம்பவத்திற்கு போடோலாந்து தீவிரவாதிகள் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீசார் அவர்கள் மீதான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Average Rating