தடுப்பு காவல் நடவடிக்கையை எதிர்த்து மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி பாகிஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு!!
மும்பைத் தாக்குதல் குற்றவாளி லக்வி, தன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளான்.
மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த கமாண்டரான ஜாகி-உர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்.
அவனுக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் இந்தியா போதுமான ஆதாரங்களை வழங்கிய போதும், போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் ஜாமீன் வழங்குவதாக வந்த தீர்ப்பினால் இந்திய அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
லக்விக்கு ஜாமீன் வழங்கியபோதும், அந்நாட்டு சிறப்பு சட்ட விதியான பொது ஒழுங்கு பராமரிப்பின் கீழ் அவன் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பு விதியின்கீழ் தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி லக்வி புதன்கிழமை மேல்முறையீடு செய்திருந்தான்.
இந்த மனுவை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது. இதையடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் லக்வி மனு தாக்கல் செய்துள்ளான். இதனை அவனது வழக்கறிஞர் ராஜா ரிஸ்வான் அப்பாசி தெரிவித்தார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Average Rating