ஆலங்குளம் அருகே 3 வயது சிறுவன் கடத்தல்?: போலீசார் தீவிர விசாரணை!!
ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார் புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது34). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவரது மகன் சிவசக்தி (3). முருகனின் மாமனார் வீடு ஊத்துமலை அருகே உள்ள கீழகலங்களில் உள்ளது. முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமனார் வீட்டுக்கு சென்று இருந்தார்.
நேற்று மாலை மாமனார் வீட்டின் முன்புறம் சிறுவன் சிவசக்தி, விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவான். ஆனால் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன முருகன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினார்கள்.
ஆனாலும் சிறுவன் சிவசக்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவனை யாரேனும் கடத்தி சென்று இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறி வருகிறார்கள். இதுகுறித்து சிறுவன் சிவசக்தியின் தந்தை முருகன் ஊத்துமலை போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை மர்ம கும்பல் கடத்தி சென்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating