சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கோவணத்துடன் வந்த காய்கறி வியாபாரி!!
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. மேலும் மேட்டூர் தொகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். வழக்கத்தை விட இன்று நுழைவு வாயில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது காலை 11 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் கோவணத்துடன் கலெக்டர் ஆபீசுக்கு உள்ளே வந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:–
தான் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாகுண்டம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்று தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளியான தான் அங்குள்ள சந்தைப்பேட்டையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும், அங்குள்ள வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டால் கடன் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் கந்து வட்டி காரர்களிடம் கடன் வாங்கி கடை நடத்தி வருகிறேன் என்றார்.
மேலும் அவர் வைத்திருந்த ஒரு கோரிக்கை மனுவில் கந்து வட்டிகாரர்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க கூடாது. ஏனென்றால் கந்து வட்டிகாரர்கள் இல்லை என்றால் பலர் செத்து விடுவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து அவரை பிடித்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating