குவைத் பாராளுமன்றத்துக்கு தேர்தலில் போட்டியிட்ட 28 பெண்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை
குவைத் நாட்டின் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முதல்முறையாக 28 பெண்கள் போட்டியிட்டனர். முதல் முறையாக இந்த தேர்தலில் தான் பெண்களுக்கும் ஓட்டுஉரிமை அளிக்கப்பட்டது. இருந்தும் இந்த தேர்தலில் ஒரு பெண்கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அரசுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து கடந்த மாதம் பாராளுமன்றத்தை மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா கலைத்து விட்டார். இதைத்தொடர்ந்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடந்தது.
தேர்தலில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டு உரிமையும், போட்டியிடும் உரிமையும் கடந்த ஆண்டு மே மாதம் அளிக்கப்பட்டது. 50 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்துக்கு மொத்தம் 249 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 28 பேர் பெண்கள். மொத்தம் உள்ள 3 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களில் 57 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இருந்தும் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. 2 பெண்கள் மட்டுமே ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்த இஸ்லாமிய கொள்கை ஆதரவாளர்களாக இருக்கும் வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றனர். மொத்த இடங்களில் 21 இடங்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த 21 பேர் உள்பட 33 பேர் எதிர்க்கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
இஸ்லாமிய வேட்பாளர்களில் 17 பேர் சன்னி முஸ்லிம்கள் ஆவார்கள். 3 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்வு பெற்றனர். அவர்கள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆவார்கள். அரசுக்கு ஆதரவான எம்.பி.க்கள் எண்ணிக்கை 13 ஆகக்குறைந்து விட்டது. இதனால் அரசுக்கும், பாராளுமன்றத்துக்கும் மேலும் அதிகமான மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.