சாயல்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி சாவு!!
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ஜீமத் பசரியா (வயது 40). இவர்களது மகள் இஸ்மத் (18).
நேற்று மதியம் ஜீமத் பசரியா தனது மகள் இஸ்மத் மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சீனி அபுல் மனைவி செய்யது காதர் பீவி (45), இவரது மகள் அராபத் (20), சீனி அபுலின் சகோதரர் முஸ்தாக்கின் மனைவி ரமீலா (23) மற்றும் குழந்தைகளுடன் நரிப்பையூர் அருகே உள்ள 5 ஏக்கர் கடற்கரைக்கு சென்றார்.
இந்த கடல் பகுதி கடல் பாசிகள் நிறைந்த பகுதியாகும். இதனால் ரம்மியமாக காணப்படும் இங்கு அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறும். பசரியா உள்பட 5 பெண்கள் 5 ஏக்கர் கடற்கரையில் உள்ள காதர் சாகிப் தர்காவில் தொழுகை முடித்து வெளியே வந்த இவர்கள் அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றனர்.
குழந்தைகள் கரையில் விளையாடிக் கொண்டிருக்க 5 பெண்களும் கடலில் குளித்தனர். அப்போது அவர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு எதிர்பாராதவிதமாக சென்றனர். அந்த சமயத்தில் ஆக்ரோஷமான அலை வந்தது. இதில் சிக்கி அவர்கள் கடலில் மூழ்கினர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மூழ்க தொடங்கினார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அப்பகுதி மீனவர்களை அழைத்தனர். விரைந்து வந்த அவர்கள் கடலில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் பசரியா, இஸ்மத், காதர் பீவி, அராபத், ரமீலா ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் பலியானதில் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Average Rating