தூத்துக்குடியில் மந்திரவாதி கொலையில் 2 வாலிபர்கள் கைது!!
தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது35). மந்திரவாதியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மகா ராஜன் (27), ராபின் (18) ஆகியோருடன் சேர்ந்து நேற்றிரவு சிலுவை பட்டி அருகே உள்ள தனியார் ஐஸ் கம்பெனி வளாகத்தில் மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது ரஞ்சித்குமார் நண்பர்கள் இருவரையும் பார்த்து, உங்களின் பெற்றோர்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் இறந்து விடுவார்கள் என்று குறி சொன்னதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கத்தியால் ரஞ்சித்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை தாளமுத்துநகர் பகுதியில் பதுங்கி இருந்த மகாராஜன், ராபின் ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைதான இருவரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
ரஞ்சித்குமார் கடந்த சில வருடங்களாக மாந்திரீக தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் மது குடித்தோம். அப்போது திடீரென ரஞ்சித்குமார் எங்களுடைய பெற்றோர் இன்னும் ஒரு வருடத்திற்குள் இறந்து விடுவார்கள் என்று குறி சொன்னார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தோம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
தொடர்ந்து போலீசார் மகாராஜன், ராபின் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating