மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் நகையை திருடி கீழே தள்ளிய கொள்ளையன்!!
எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முனீஸ்வரி (25). கம்ப்யூட்டர் என்ஜினீயர்.
நாகராஜன் பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். முனீஸ்வரி தாம்பரத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வேலை முடிந்ததும் முனீஸ்வரி தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அங்கிருந்து கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிட்டிருந்தார்.
ரெயில் கோட்டை ரெயில் நிலையத்துக்கும் கடற்கரை ரெயில் நிலையத்துக்கும் வந்து கொண்டிருந்தது. முனீஸ்வரி பெண்கள் பெட்டியில் தனியாக உட்கார்ந்து, கணவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பெட்டிக்குள் நுழைந்த ஒரு வாலிபர், முனீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்தான். அதை தடுக்க முனீஸ்வரி முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இது போனில் பேசிக் கொண்டிருந்த அவரது கணவர் நாகராஜனுக்கும் போனில் கேட்டது.
தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்ட அந்த வாலிபர், முனீஸ்வரியிடம் இருந்த கைப்பையையும் பறிக்க முயன்றான். பையை அவர் விடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் முனீஸ்வரியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டான்.
ரெயிலில் இருந்து கீழே விழுந்து கிடந்த முனீஸ்வரியை எதிரே மெதுவாக வந்த மற்றொரு ரெயிலில் பயணம் செய்தவர் காப்பாற்றி அழைத்து வந்தார். இதற்குள் அவரது கணவரும் அங்கு வந்து சேர்ந்தார்.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்தார். தப்பி ஓடியவர் வட மாநில வாலிபர் என்று முனீஸ்வரி போலீசாரிடம் தெரிவித்தார்.
ரெயிலில் இருந்து கீழே விழுந்த முனீஸ்வரியின் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சங்கிலியை பறித்து விட்டு பெண் என்ஜினீயரை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating