அமெரிக்காவுக்கு பின்லேடன் மீண்டும் எச்சரிக்கை
சர்வதேசபயங்கரவாதியான பின்லேடன் அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்து உள்ளான். இந்த எச்சரிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 19 நிமிடத்துக்கு இடம்பெற்றுள்ள இந்த செய்தியில் பின்லேடனின் குரல் இடம் பெற்று உள்ளது. அதில் அவன் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல்-ஜர்க்காவியை புகழ்ந்து பேசி இருக்கிறான்.
புனிதப்போரில் சிங்கமாக இருந்த அல் ஜர்க்காவி வெட்கக்கேடான முறையில் அமெரிக்காவால் கொல்லப்பட்டதை பார்த்து எங்கள் இஸ்லாமிய தேசம் ஆச்சரியம் அடைந்தது.அல் ஜர்க்காவி மன உறுதி யும் தீர்க்கமும் மிக்கவர். அவரை வீரமிக்க தியாகியாக கடவுள் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். இந்த மரணத்துக்காக நீங்கள்(அமெரிக்கா) ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டாம். ஒரு சிங்கம் போனால் என்ன இன்னொரு சிங்கம் வரும். உங்களை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டம் தொடரும். ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து உங்களை விரட்டி அடிக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.
அல்ஜர்க்காவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் அமெரிக்கா ஒப்படைக்கவேண்டும்.ஜர்க்காவியின் சொந்த ஊரில் அவரது இறுதிச்சடங்கை நடத்த ஜோர்டான் மன்னர் அனுமதிக்க வேண்டும் இவ்வாறு இணையதளத்தில் இடம் பெற்ற அந்த செய்தியில் பின்லேடன் கூறி இருக்கிறான்.