கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியை கொன்று புதைத்த பெண் தலைமறைவு!!
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியை சேர்ந்தவர், ஏசைய்யா(40). வாட்ச்மேனாக வேலை பார்த்துவரும் இவர், தனது மனைவி சாயம்மா(38) என்பவருடன் சராசரி தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த இரண்டு மாத காலமாக சாயம்மாவிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால் அவரது உறவினர்கள் ஏசைய்யாவின் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். அவர் கூறிய பதில்கள் முரண்பாடாக இருந்ததால் சந்தேகப்பட்ட அவர்கள் சாயம்மாவை காணவில்லை என்று நர்சிங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஏசைய்யாவை போலீசார் ’உரிய முறையில்’ விசாரித்தபோது அவரும் அவரது முன்னாள் காதலியும் சேர்ந்து சாயம்மாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பிணத்தை ரகசியமாக புதைத்த விபரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சாயம்மாவை திருமணம் செய்வதற்கு முன்னதாகவே திருமலாம்மா என்ற பெண்ணை ஏசைய்யா காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த காதலுக்கு திருமலாம்மாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து வைத்தனர்.
அந்த திருமண வாழ்க்கை தோல்வியடைந்து வாழாவெட்டியாக தாய்வீடு திரும்பிய திருமலாம்மாவுக்கும் ஏசைய்யாவுக்கும் இடையில் மீண்டும் காதல் துளிர்த்தது.
ஆனால், அது நேர்மையான-நல்ல காதலாக இல்லாமல், மனைவி சாயம்மாவுக்கு பயந்து, பயந்து காதலிக்கும் கள்ளக்காதலாக இருப்பதை எண்ணிய ஏசைய்யாவும் திருமாலாம்மாவும் சாயம்மாவை தீர்த்துக் கட்டிவிட்டால் கணவன்-மனைவியாக சந்தோஷமாக வாழலாம் என்று திட்டமிட்டனர்.
இதனையடுத்து, இரு மாதங்களுக்கு முன்பு சாயம்மாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு காலி இடத்தில் அவரை ரகசியமாக புதைத்து விட்டனர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏசைய்யாவை இன்று கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் திருமலாம்மாவை தேடி வருகின்றனர்.
Average Rating