வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யவும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும்!!
கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களின் தனியார்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், கட்டுமான பணிமனைகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் இல்லங்களில் பணியாற்றும் வெளியூர்களை சேர்ந்த ஊழியர்கள், 7ம் திகதி இரவே வீடு சென்று மறுநாள் வாக்களிக்கும் முகமாக தேர்தல் தினமான 8ம் திகதி முழுநாள் விடுமுறையை வழங்கும்படி அனைத்து தொழில் தருனர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் விடுத்துள்ள அவசர வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,
நடைபெறவுள்ள தேர்தல், நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாகும். எந்த வேட்பாளருக்கு, எந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் அனைத்து கட்சிகளும் உரிய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எந்த அணி வெற்றிப்பெற்றாலும், ஒரு சிறிய வித்தியாசத்திலேயே வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாம் என்பதையே கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
எனவே இதில் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரினதும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும். இந்நிலையில் தமது ஊழியர்கள் தங்களது வாக்களிக்கும் கடமையை செய்வதற்கு ஏதுவாக, தொழில்தருனர்கள் முழுநாள் விடுமுறையை தேர்தலன்று வழங்கி ஒத்துழைக்கும்படி கோருகிறேன்.
கொழும்பு உட்பட மேல்மாகாணத்திலும், கண்டி உட்பட மத்திய மாகாணத்திலும் மற்றும் ஏனைய மாகாண நகரங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழ் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மலையகத்தை சார்ந்தவர்கள். வாக்குரிமையை நிறைவேற்ற தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு சென்று வர இவர்களுக்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு வாக்கும் இந்த தேசிய ஜனதிபதி தேர்தலில் முக்கியமானது என்பதால், தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காமலும், அவர்களது வாக்களிக்கும் உரிமையை மீறும்முகமாகவும், நடந்து கொள்ள வேண்டாம் என தனியார் வர்த்தக தொழில்தருனர்களை அன்புடன் வேண்டுகிறேன். இதுவே நீங்கள் எங்களுக்கு தரக்கூடிய அதிகூடிய ஒத்துழைப்பாகும்.
எனவே இவற்றை மனதில் கொண்டு 8ம் திகதி தேர்தலன்று ஊழியர்களுக்கு முழுநாள் விடுமுறையை வழங்கி, 7ம் திகதி இரவே அவர்கள் வீடு செல்ல ஒத்துழைக்கும்படி வர்த்தக நண்பர்களையும், வாக்களிக்க விடுமுறை பெற்று செல்வோர் காலையிலேயே வாக்களித்துவிட்டு அன்றைய தினமே வேலைத்தளங்களுக்கு திரும்பவேண்டுமென ஊழியர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
Average Rating