கோவையில் உடலுக்குள் ஆவியை செலுத்தியதாக மந்திரவாதிகள் மீது வாலிபர் புகார்!!
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் பதட்டத்துடன் அங்கு வந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் நான் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுக்க வேண்டும், என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்றார்.
எந்த பிரச்சனை தொடர்பாக புகார் கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர் கூறிய தகவல் சற்று அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. என் பெயர் சதீஸ்குமார். எனக்கு 36 வயதாகிறது.
கோவை பீளமேடு சவுரிபாளையத்தில் வசித்து வருகிறேன். எனது உடலுக்குள் 9 மந்திரவாதிகள் ஆவியை செலுத்தி விட்டனர். மேலும் எனது காதுக்குள் எப்போதும் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எனது உடலுக்குள் ஆவி புகுந்ததால் நரம்பெல்லாம் இழுத்து பிடித்தாற்போல இருக்கிறது. மந்திரவாதிகள் மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அவரது பேச்சுக்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்ததால் உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அவரை அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Average Rating