கோவையில் காதலியின் தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது!!
கோவை வீரபாண்டி பிரிவு லட்சுமி நகரை சேர்ந்த செல்வராஜின் மனைவி சாந்தா (வயது 50). இவர் நேற்று மாலை வீரபாண்டி பிரிவு பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார்.
அப்போது பின்னால் ஒரு வாலிபர் வந்தார். திடீரென சாந்தா மீது மோதினார். நிலைதடுமாறிய சாந்தா சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சாந்தாவின் மார்ப்பில் வெட்டினார்.
அதிர்ச்சியடைந்த சாந்தா அலறி சத்தம் போட்டார். மீண்டும் அந்த வாலிபர் வெட்ட முயன்றார். சாந்தா கையால் தடுத்தார். அதில் கை மற்றும் விரல்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சாந்தாவின் அலறல் சத்தம்கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார். சாந்தா அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராக்கி பாளையத்தை சேர்ந்த ராஜ்குமாரை (36) பிடித்து விசாரணை செய்ததில் சாந்தாவை அரிவாளால் வெட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் தானும், சாந்தாவின் மகளும் காதலித்தோம். திருமணம் செய்வதாகவும் இருந்தோம்.
எங்கள் காதல் விவகாரம் தெரியவரவே சாந்தா அவசர அவசரமாக எனது காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். இதனால் நான் நிம்மதி இழந்தேன்.
எனது வாழ்க்கையில் விளையாடிய காதலியின் தாயை வெட்டிக்கொன்று ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள நினைத்து வெட்டினேன் என்றார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Average Rating