டார்ச் லைட் வெளிச்சத்தில் வரிசையாக நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைகள்!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் எடுத்த புகைப்படத்தால் அம்பலமாகியுள்ளது. மாநில அரசு நடத்தும் இந்த சுகாதார மையத்தில் புதன்கிழமை இரவு கருத்தடை ஆபரேசனுக்கு 40 பெண்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மின்சாரம் தடைப்பட்டதையடுத்து, அவர்களுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் அவர்கள் நடைபாதையில் சாய்வாக உட்கார வைக்கப்படுகின்றனர். அவர்களைக் கொண்டு போக ஸ்ட்ரெச்சர், படுக்க போர்வை, அவசர உதவிக்கு உதவியாளர்கள் என்று அந்த சுகாதார மையத்தில் எந்த வசதியுமே கிடையாது.
தன் மருமகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த சவித்ரா தேவி என்பவர் கூறுகையில், “இங்கு எந்த விதமான முன்னேற்பாடுகளும் கிடையாது. எங்களை மிருகங்கள் போல் நடத்துகிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தார். டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்ததை மறுத்துள்ள மூத்த அரசு மருத்துவர், மோசமான ஏற்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த கருத்தடை முகாமில் ஒரே சமயத்தில் 80 பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 13 பெண்கள் இறந்துள்ளனர். கருத்தடைக்குப் பின் கொடுக்கப்படும் மாத்திரையில் எலிமருந்தில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஜார்க்கண்டில் கருத்தடை அறுவை சிகிச்சைகளை டாக்டர்கள் செய்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசாங்கம் மருத்துவ அதிகாரிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. அரசு அதிகாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கிறார்கள். சம்பவம் நடந்த சத்ரா மாவட்டத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு இந்த மாத இலக்கு 3000 அறுவை சிகிச்சைகள். அதில் 25 சதவீதத்தை இப்போதே முடித்து விட்டார்கள். இந்தியா மருத்துவத் துறையில் வெகுவாக முன்னேறிவிட்டது?
Average Rating