அடுத்தவர் மனைவியை அபகரித்ததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்!!
சென்னை மாம்பலத்தை சேர்ந்த குள்ள முருகன் என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னையை கலக்கி போலீசாரின் என் கவுண்டருக்கு பலியான தாதா பங்க் குமாரின் கூட்டாளியான இவர் கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரேகா என்ற கேரள பெண்ணை திருமணம் செய்த குள்ள முருகன் மாம்பலம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் பெண் ரஞ்சிதாவுடனும் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார். அவருடன் தனிக்குடித்தனம் நடத்தியதில் ரஞ்சிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரேகாவுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் 3–வதாக மாம்பலம் காமராஜர் காலனியை சேர்ந்த லோகு என்ற லோகநாதனின் மனைவி தமிழரசியுடன் குள்ள முருகனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனை லோகு கண்டித்தார். இருப்பினும் குள்ள முருகனால் தமிழரசியுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து லோகுவும் அவரது நண்பர்கள் சிலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குள்ள முருகனை அழைத்து பஞ்சாயத்து பேசி உள்ளனர். அப்போது அவர் தமிழரசியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
ஆனால் அடிக்கடி தமிழரசியை தேடி குள்ள முருகன் அவரது வீட்டுக்கே சென்று உள்ளார். அதன் காரணமாக தமிழரசியின் கணவர் லோகநாதன் உறவினர்களை வைத்து குள்ள முருகனை கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக லோகநாதனின் மைத்துனர்கள் திருமுல்லைவாயலை சேர்ந்த அரிகரசுதன், வியாசர்பாடி ராஜேஷ், அம்பத்தூரை சேர்ந்த நண்பர் பிரபு ஆகியோரை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்தார்.
முக்கிய குற்றவாளியான லோகு, ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை தொடர்ந்து அரிகரசுதன், ராஜேஷ், பிரபு ஆகியோரும் கோர்ட்டில் சரண் அடைய திட்டம் திட்டிய நிலையில் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
குள்ள முருகனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவர்கள் கூறியதாவது:–
நீண்ட நாட்களாகவே லோகநாதனின் மனைவி தமிழரசியுடன் குள்ள முருகன் தொடர்பு வைத்து உள்ளார். இதனை பல முறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று லோகநாதன் எங்களிடம் கூறி வருத்தப்பட்டார்.
இதனால் அவருடன் சேர்ந்து குள்ள முருகனை கொலை செய்ய திட்டமிட்டோம். நேற்று முன்தினம் குள்ள முருகனிடம் நைசாக பேசி மது குடிக்க அழைத்து சென்றோம்.
லோகுவின் மனைவியை அபகரிக்க முயன்ற குள்ள முருகன் 3 வயது பெண் குழந்தையையும் நானே வளர்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் அவரை கொலை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கொலையில் தீவிரமாக துப்பு துலக்கி உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனிப்படையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Average Rating