தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் குத்திக் கொலை!!
தஞ்சை அருகே உள்ள ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
தற்போது கட்டிடங்களுக்கு வயரிங் வேலைகள் நடைபெறுகிறது. இந்த பணியில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா கிளியூரை சேர்ந்த பால் ஆரோக்கியசாமி மகன் பிரகாஷ் (27) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் குடல் சரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். அவரை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தொழில் போட்டியில் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. செங்கமலக் கண்ணன் மற்றும் போலீசார் கால் நடை மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்றனர்.
இக்கொலை தொடர்பாக பிரகாசுடன் வேலை பார்க்கும் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating