திருமணத்துக்கு மறுத்து காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 30 வயது நிரம்பிய இவர் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
அவருக்கு வேலை பார்க்கும் அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஷெரிப் (30) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.
காதலர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கணபதி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன்–மனைவி போல் வாழ ஆரம்பித்தனர். ஷெரிப் திருமணம் செய்து கொள்வதாக ராணியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்தார்.
இந்த நிலையில் ராணியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து பத்திரிக்கை அடிக்கும் பணியில் இறங்கினர். தகவலறிந்ததும் ஊருக்கு சென்ற ராணி பெற்றோரிடம் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் ஷெரிப்பை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கோவை திரும்பிய ராணி காதலன் ஷெரிப்பிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
அதற்கு ஷெரிப் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
அதிர்ச்சியடைந்த ராணி ஆசைவார்த்தை கூறி வாழ்க்கையை சீரழித்த ஷெரிப் மீது கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷெரிப்பை கைது செய்தனர். அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating