மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி பரமக்குடி பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ் கிறிஸ்டோபர். இவர் தனது மகள் பெர்லின் எலிசபெத்துக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு கேட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஜெயபால் என்பவரை அணுகினார்.
அதற்கு ஜெயபால் சீட்டு வாங்க ரூ.45 லட்சம் செலவாகும் என்று பேசி முடித்தார். இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்பணமாக ரூ.2½ லட்சத்தை கிறிஸ்டோபர் ஜெயபாலிடம் வழங்கினார்.
அதன் பின்னர் இரு தவணைகளில் ரூ.12 லட்சமும், ரூ.3 லட்சமும் பரமக்குடி தனியார் வங்கி மூலமாக ஜெயபால் கணக்கில் செலுத்தப்பட்டது. நீண்ட நாட்களாகியும் குறிப்பிட்டபடி ஜெயபால் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தரவில்லை.
இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த லாரன்ஸ் கிறிஸ்டோபர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணனிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணபதி, சப்–இன்ஸ்பெக்டர் வினைதீர்த்தான் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான ஜெய பாலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Average Rating