குழந்தையை டியூசன் சேர்ப்பதாக கூறி நோட்டம்: ஆசிரியை வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது!!
பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் கிழக்கு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லலிதா. மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளார்.
கடந்த 27–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது 60 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைப்போனது.
இதுகுறித்து பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்–இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த மாற்றுச்சாவி மூலம் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கண்ணன் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் விபரத்தை சேகரித்தனர். அப்போது நங்கநல்லூர் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்த அனுராதா, தனது குழந்தையை டியூசனில் சேர்க்க கோரி அடிக்கடி வந்து சென்றது தெரிந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நகையை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அனுராதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 பவுன் நகை மீட்கப்பட்டது.
‘டியூசன் எடுக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் அனுராதா நுழைந்து அங்குள்ளவர்களிடம் சகஜமாக பேசுவது வழக்கம். அவர்கள் வீட்டை பூட்டி வெளியூர் செல்லும்போது கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு நங்கநல்லூர் இந்து காலனியில் குருராஜன் என்பவரது வீட்டில் 10 பவுன் நகை திருடியதும் தெரிய வந்துள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கணவருக்கு தெரியாமல் கொள்ளையில் ஈடுபட்டதாக அனுராதா போலீசில் தெரிவித்தார்.
Average Rating