உ.பி.யில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள மலிஹாபாத் பகுதி மற்றும் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஹசன்கஞ்ச் பகுதியில் உள்ள டலசாராய் கிராமத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் நேற்று விஷச் சாராயம் குடித்ததால் கடுமையான நெஞ்செரிச்சல் மற்றும் கண் பார்வை மங்கிய நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இன்று மாலை வரை 31 பலியானதாகவும், நேற்றிரவு மட்டும் 17 பேர் பலியானதாகவும் தெரிய வந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் ஆஸ்பத்திரிகளில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த மரணங்கள் தொடர்பாக உடனடியாக உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது உ.பி. மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கலால் துறை உதவி கமிஷனர், துணை கமிஷனர், மாவட்ட கலால் அதிகாரிகள், துணை வட்டார மாஜிஸ்திரேட் உள்ளிட்ட பலரை சஸ்பெண்ட் செய்து முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் இன்றிரவு உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating