ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4–ம் வகுப்பு மாணவன் பலி!!
ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் எமராஜன் (வயது9). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய எமராஜன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன்பிடிக்க சென்றான்.
அப்போது திடீரென எமராஜன் கிணற்றில் தவறி விழுந்தான். இதில் அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். எமராஜனின் பெற்றோர் மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.
அப்போது எமராஜன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் மாணவனை தேடி பார்த்தனர். உடலை மீட்க முடியாததால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர்.
பின்னர் நள்ளிரவில் கீழப்பாவூர் அருகே உள்ள கடையூர் பகுதியை சேர்ந்த விவசாயி முப்பிடாதி (75) என்பவர் கிணற்றுக்குள் குதித்து மண்ணில் புதைந்திருந்த மாணவனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
மாணவனின் உடலை ஆலங்குளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating