ஈரோட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை!!
ஈரோடு வைராபாளையம் ரோட்டில் ஒரு கடை முன் உள்ள வராண்டாவில் ஒருவர் பிணமாக கிடந்தார்.
அவரது தலையில் மர்ம ஆசாமிகள் 2 பெரிய கற்களை போட்டு கொலை செய்து உள்ளனர். ஒரு கல் அவரது தலை மீது இருந்தது. மற்றொரு கல் அருகே கிடந்தது.
இதனால் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். ரத்தம் உறையாமல் வழிந்து கிடந்ததால் அவர் இன்று அதிகாலையில் தான் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டிருப்பார் என நம்பப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 35 வயது இருக்கும். சிகப்பு கலரில் கருப்பு வெள்ளை கோடு போட்ட டீ சர்ட்டும் லுங்கியும் அணிந்திருந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்து கிடந்தவர் பற்றி அப்பகுதி மக்களிடம் போலீசார் கேட்ட போது யார் என்று தெரியவில்லை. புதிய நபராக இருக்கிறார் என்று கூறினர்.
இன்னும் சிலர் கூறும் போது கொலை செய்யப்பட்டவரும் மற்றொருவரும் நேற்று இரவு இங்கு அமர்ந்து மது குடித்து கொண்டிருப்பதை பார்த்தோம் என்று கூறினர்.
வெளியூரை சேர்ந்த அவர்கள் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கக்கூடும் என்றும் தூங்கி கொண்டிருந்தவர் மீது கொலையாளி கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
கொலையை பற்றி துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் விக்கி அங்கு வர வழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து அருகே உள்ள குறுக்கு சந்து வழியாக ஓடி மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்தது. பிறகு அருகே உள்ள மாநகராட்சி தண்ணீர் குழாய் அருகே வந்து நின்றது.
இதனால் கொலையாளி கச்சிதமாக கொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அந்த குழாயில் கை, கால் மற்றும் முகத்தை கழுவி தப்பி சென்றிருக்கக்கூடும் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating