கும்பகோணத்தில் கள்ளக்காதலியை எரித்து கொன்ற கவுன்சிலர் கைது!!
கும்பகோணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.
காசிநாதனின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜித்து என்கிற இந்திரஜித். கும்பகோணம் நகராட்சி 44–வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்த இவர் தற்போது கட்சியிலிருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில் சங்கீதாவுக்கும் இந்திரஜித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை பல முறை காசிநாதன் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தொடர்பை துண்டிக்கவில்லை.
இந்த நிலையில் சங்கீதா உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அங்கு நின்றிருந்த அவரது கணவர் காசிநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி சங்கீதா பரிதாபமாக இறந்தார். அவர் இறப்பதற்கு முன் கும்பகோணம் 2–வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் சண்முக பவனிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதில் இந்திரஜித் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருந்தார். என் கணவரையும், மகன்களையும் விட்டு விட்டு வந்து விடு. உன்னை வைத்து காப்பாற்றுகிறேன் என கூறினார்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார் என கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திரஜித் மீது கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
இந்த நிலையில் கும்பகோணம் நகராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவருமான தமிழழகன் கூறியதாவது:–
இந்திரஜித் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் கட்சி நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்வதில்லை. நகர் மன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவர் கட்டுப்படுவதில்லை.
அவர் கட்சியில் இருந்து விலகியே இருந்தார். அவர் தற்போது தி.மு.க.வில் இல்லை என கூறி உள்ளார். கள்ளக்காதலியை கவுன்சிலர் எரித்து கொன்ற சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating