ஒபாமா வருகை: உணவகங்களை மூடவும் அவசரப்பாதை அமைக்கவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்!!
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார்.
உலக தீவிரவாதிகளின் ‘டாப் ஹிட் லிஸ்ட்’ பட்டியலில் இருக்கும் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகளை பார்வையிடவும், உரிய ஆலோசனைகளை வழங்கவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்ட்டகனை சேர்ந்த உயரதிகாரிகள் விரைவில் புதுடெல்லி வரவுள்ளனர்.
இந்நிலையில், உலக புகழ்பெற்ற தாஜ் மஹாலை பார்வையிட ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் வரும் 27-ம் தேதி ஆக்ரா நகரத்துக்கு செல்ல உள்ளனர். டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்லும் பாதையை இன்று பார்வையிட்ட அமெரிக்க ரகசிய போலீசார், டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் வழி நெடுகிலும் உள்ள உணவகங்களை சுத்தப்படுத்தி, 27-ம் தேதி அன்று மூடி வைக்கும்படி இந்திய அதிகாரிகளிடம் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த பாதையை குறி வைத்து ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அங்கிருந்து ஒபாமா மற்றும் அவருடன் வரும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மாற்று வழியில் தப்பிக்க அவசரப்பாதை அமைக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அது மட்டுமின்றி, ஒபாமாவின் உண்மையான பயணத்துக்கு ஒரு பாதையையும் (டம்மி பாதை), முன்னறிவிப்பாக வேறு பாதையையும் தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மியான்மர் தலைநகர் நய் பி டாவில் நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு ஒபாமா வந்தபோது, ஆறு விமானங்கள் நிறைய பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள், பெட்ரோல் டேங்கர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 1600 பாதுகாப்பு படை வீரர்கள் உடன் வந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
Average Rating