சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை: தாய்– மகனுக்கு வலைவீச்சு!!
சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த சொக்கநாச்சியார் புரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிப்பாண்டி (வயது 75) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பட்டன் (வயது 45). இவரது மனைவியின் சகோதரனிடம் இருந்து சீனிப்பாண்டி சில வருடங்களுக்கு முன்பு 25 சென்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தில் தனது மனைவிக்கும் பங்கு உண்டு என்று பட்டன், சீனிப்பாண்டியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பட்டன், சீனிப்பாண்டி வாங்கிய இடத்தின் ஒரு பகுதியில் வைக்கோல் போர் வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனிப்பாண்டி தனது மகன் ஆறுமுகத்தை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு சென்று வைக்கோல் போரை அப்புறப்படுத்தினார்.
அப்போது அங்கு வந்த பட்டன், அவரது மனைவி வள்ளியம்மாள் (40), மகன் முத்தையா என்ற மகேஷ் (23), உறவினர் வசந்தி (38) ஆகியோர் உருட்டுகட்டையால் சீனிப்பாண்டியை சரமாரி அடித்து தாக்கினார்கள்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சீனிப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் காயம் அடைந்த சீனிப்பாண்டியன் மகன் ஆறுமுகம் (38) தேவர்குளம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டனை கைது செய்தனர்.
அவரது மனைவி வள்ளியம்மாள், மகன் மகேஷ், உறவினர் வசந்தி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Average Rating