வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது!!
மத்திய பிரதேசத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
25 வயதான ஸ்வாதி சூர்யவன்ஷி என்ற இளம்பெண், மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். படித்துக் கொண்டே பகுதி நேர வேலையாக தேசிய வங்கி ஒன்றில் விற்பனைப்பிரிவு மேலாளராகப் பணிபுரியும் இவர், அதே வங்கியில் பணிபுரியும் 48 வயதான அதிகாரி ஒருவரோடு நெருங்கிப் பழகி அவரைப் பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த அதிகாரியை வைத்து பவார்குன் பகுதியில் பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்த ஸ்வாதி, பிரியா என்ற இளம் பெண்ணின் உதவியுடன் அந்த அதிகாரியைக் காதல் வலையில் வீழ்த்தினார். தனது திட்டப்படி அந்த பிளாட்டிற்கு பிரியாவை அனுப்பி அங்கு மறைத்து வைக்கப்பட்ட கேமராவின் மூலம் அந்த அதிகாரிக்கும் பிரியாவுக்குமிடையே நடந்த அந்தரங்க விஷயங்களைப் பதிவு செய்துள்ளார். ஸ்வாதியின் திட்டப்படி வீடியோவை வைத்து அதிகாரியை மிரட்டத் தொடங்கிய பிரியா 80 லட்ச ரூபாய் தரவில்லையென்றால் வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
கடந்த புதன் அன்று இந்த சம்பவம் குறித்து இந்தூர் ஐஜி விபின் மகேஸ்வரியிடம் புகார் அளித்த வங்கி அதிகாரி, எல்லா விவரங்களையும் கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் ஸ்வாதி, மற்றும் பிரியா மற்றும் ஸ்வாதியின் ஆண் உதவியாளர் படோரியா ஆகிய மூவர் மீதும் மிரட்டல், மோசடி மற்றும் சதி போன்ற குற்றங்களில் ஏடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை ஸ்வாதியைக் கைது செய்த காவல் துறையினர், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் 21-ம் தேதி வரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார்.
Average Rating