டாக்டர் இறந்ததாக கூறிய மாணவர் உடல் அசைந்ததாக பரபரப்பு: உறவினர்கள் முற்றுகை!!
வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ரூபன்சக்கரவர்த்தி (வயது 17). வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாக்டர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டது.
அதன்பிறகு அங்கு வந்த டாக்டர் மாணவன் ரூபன் சக்ரவர்த்தியை பரிசோதனை செய்தார். அதில் மாணவரை இறந்துவிட்டதாக கூறி பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்ப முற்பட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களும், உறவினர்களும் மாணவனின் உடலில் அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சியிலிருந்து மீண்டனர்.
உடல் அசைவு உள்ளவரை இறந்துவிட்டதாக கூறுவதா? என கொதிப்படைந்த உறவினர்கள், ரூபன்சக்கரவர்த்தியை மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வதாக கூறி டாக்டரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்கம், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.
அங்கு அவர் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ரூபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் நம்பிக்கையோடு இருந்த பெற்றோர் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்திருந்தால் மாணவனை காப்பாற்றியிருக்கலாம் என உறவினர்கள் சோகத்துடன் கூறினர். இந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating