சத்ருகன் சின்ஹா மகன் திருமண விழா: பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!!
நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் திருமண விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிரபல இந்தி நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியும், தற்போது பா.ஜ.க.வின் பாட்னா தொகுதி எம்.பி.யுமாக உள்ள சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் (31). சத்ருகன் சின்ஹாவுடன் அவரது சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொழிலை கவனித்துவரும் குஷ், லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டருணா அகர்வாலை மும்பையில் இன்று திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண விழாவுக்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மணமக்களுக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட ஏராளமான அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில் சத்ருகன் சின்ஹாவின் மகளும் ரஜினியுடன் ‘லிங்கா’வில் கதாநாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹாவும் தனது ஷூட்டிங் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு கலந்து கொண்டார்.
மணமக்களுடன் மோடி இருக்கும் புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இன்று மாலை வெளியிட்ட சோனாக்ஷி சின்ஹா, ‘‘எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. உங்களது வருகையால் இந்த நாள் எங்களுக்கு சிறப்புக்குரிய நாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Average Rating