நாகர். வாலிபர் கொலை: என்னை கொல்ல திட்டமிட்டதால் தீர்த்து கட்டினேன்- தொழிலாளி வாக்குமூலம்!!
நாகர்கோவில் வைத்தியநாத புரம் வீரசிவாஜி தெருவைச் சேர்ந்தவர் டேவிட், (வயது 26).
இவர் மீது திருட்டு, மிரட்டல் உள்பட சில வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் டேவிட்டை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து அவரது தாயார் சாந்தி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில் டேவிட்டை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் அவரது அத்தான் காடை ராஜன், கூட்டாளிகள் கண்ணன், வில்சன் ஆகியோர் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
போலீசார் அவர்களை தேடிவந்த நிலையில் காடை ராஜன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். டேவிட் தன்னை வெட்டியதில் காயமடைந்ததாக காடை ராஜன் கூறினார்.
இதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வரும் அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமறைவாகி இருந்த ரமேஷ், கண்ணன், வில்சனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ரமேஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
டேவிட்டுக்கும் எனக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது டேவிட் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். டேவிட்டுக்கு ரவுடி ஒருவருடன் தொடர்பு இருந்து வந்தது. அவர் மூலமாக என்னை கொலை செய்து விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இதுபற்றி என்னுடைய அத்தான் காடை ராஜனிடம் கூறினேன். டேவிட் என்னை கொலை செய்வதற்குள் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். கடந்த ஒருவாரமாக டேவிட்டின் நடவடிக்கைகளை கண்காணித்தோம். தினமும் இரவு அவர் அந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
சம்பவத்தன்று அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தோம். நள்ளிரவு டேவிட் வந்தபோது அவரை சரமாரியாக வெட்டினோம். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கைது செய்யப்பட்ட ரமேஷ், கண்ணன், வில்சன் 3 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காடை ராஜன் குணமானதும் அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating