பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மேஸ்திரி சாவு: பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்– தடியடி!!
பெரணமல்லூர் தேவநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40), கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதி பொன்னியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்திபனுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெயவேல், அ.தி.மு.க. பிரமுகர் சங்கர், தமிழ், சரத்குமார், முரளி, அன்பரசு ஆகியோருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கு பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 15–ந்தேதி மாலை தேவநாத்தூர் ஏரிக்கரை வழியாக பார்த்திபன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஜெயவேல், சங்கர், தமிழ், சரத்குமார், முரளி, அன்பரசு ஆகிய 6 பேரும் முன்விரோதம் காரணமாக பார்த்திபனை பிடித்து தாக்கினார்கள். பின்னர் அவர்கள் வைத்திருந்த பெட்ரோலை பார்த்திபன் மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பார்த்திபன் தீயின் தாக்கம் தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு, வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்திபன் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பார்த்திபன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பார்த்திபனின் உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து மறியலுக்கு ஈடுபட முயன்றதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இது தொடர்பாக பெரணமல்லூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஜெயவேல், சங்கர், தமிழ், சரத்குமார், முரளி, அன்பரசு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அ.தி.மு.க. பிரமுகர் சங்கர், சரத்குமார், முரளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடிவருகின்றனர்.
Average Rating