பீகாரில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மூவர் எரித்து கொலை: 14 பேர் கைது!!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே சிறுபான்மை மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் 25 குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததுடன், மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றது.
அம்மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள பகில்வாரா கிராமத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள ஒரு இடத்தில், அந்த இளைஞரின் உடல் சடலமாக கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அப்பெண்ணின் கிராமத்துக்குள் நுழைந்த 5000 பேர் அடங்கிய கும்பல், வீடுகளை அடித்து நொறுக்கி, குடிசை வீடுகளுக்கும் தீ வைத்தனர். அங்கு வசிக்கும் மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றனர். தீ வைத்து எரிக்கப்பட்ட மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று பீகார் காவல்துறை செய்தி தொடர்பாளர் குப்தேஸ்வர் பாண்டே கூறினார். அம்மாவட்டத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டதுடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை கைது செய்துள்ளனர்.
Average Rating