மதுரை அருகே தாய்–மகள் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி கொலை!!
மதுரை அருகே உள்ள சோழவந்தானை அடுத்தது மேலக்கால். இந்த ஊரை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் முனியாண்டி. கூலி தொழிலாளி.
தற்போது தாராப்பட்டியில் வசித்து வரும் இவர், இன்று காலை தனது மனைவி ராணி மற்றும் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சோழவந்தான் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
தாராப்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் முனியாண்டியின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளி உள்ளனர்.
இதில் அவர் கீழே விழுந்ததும் 3 பேரும் சரமாரியாக அரிவாளால் முனியாண்டியை வெட்டினர். உடனே தனது மனைவியையும், பேரனையும் தப்பி செல்லுமாறு கூறி விட்டு அருகில் உள்ள வாழை தோப்புக்குள் முனியாண்டி தப்பி ஓடினார்.
ஆனால் தொடர்ந்து துரத்திய அந்த ‘மர்ம’ கும்பல் முனியாண்டியை வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பலியானதும், தலையை அந்த கும்பல் துண்டித்தது.
பின்னர் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு மேலக்கால் சென்ற கும்பல், அங்கு முனியாண்டியின் வீட்டு முன்பு அதனை வைத்து விட்டு தப்பி சென்று விட்டது.
இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேசன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தலை, உடல்களை கைப்பற்றி தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
விசாரணையில் பழிக்கு பழியாக முனியாண்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2013–ம் ஆண்டு மேலக்காலை சேர்ந்த செல்லம்மாள் (வயது 60), அவரது மகள் முருகேசுவரி (37) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக முனியாண்டியை போலீசார் கைது செய்தனர். சிறிது காலம் சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவரை ‘மர்ம’ கும்பல் வெட்டி சாய்த்துள்ளது.
Average Rating