சுசீந்திரம் அருகே பெண் என்ஜினீயர் தீக்குளிப்பு: சித்ரவதை செய்த கணவர் கைது!!
சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாசன் (வயது 32). மீன் பிடி தொழிலாளி.
இவருக்கும் முட்டத்தை சேர்ந்த சகிலாவுக்கும்(28) கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எம்.இ. பட்டதாரியான சகிலா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லாமல் கணவர் வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற சகிலாவின் வாழ்க்கையில் புயல் வீசியது. கணவர் அந்தோணிதாசன் சரி வர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சகிலாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.
கணவர் சித்ரவதை செய்வது பற்றி சகிலா தனது அக்காள் ஜெசிந்தாவிடம் கூறி அழுதார். அவர் அவ்வப்போது நேரில் வந்து ஆறுதல் கூறி சகிலாவை தேற்றினார். இதையறிந்த அந்தோணிதாசன் வெளியே செல்லும் போது சகிலாவை வீட்டுக்குள் பூட்டி வைத்து சென்று விடுவாராம். இவ்வாறாக கணவரின் சித்ரவதை அதிகரித்துக்கொண்டே போனதால் சகிலா விரக்தியடைந்தார்.
நேற்று இரவு 7 மணி அளவில் சகிலா கணவர் அந்தோணிதாசனிடம் குழந்தைக்கு பால் வாங்க வேண்டும், பணம் தாருங்கள் என கேட்டுள்ளார். இது அந்தோணிதாசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண் என்றும் பாராமல் சகிலாவை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி விட்டு வெளியே சென்று விட்டாராம்.
இதனால் மனம் நொந்து போன சகிலா நைட்டியில் தீயை பற்ற வைத்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் தீயை அணைத்து சகிலாவை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சகிலா சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு பூதப்பாண்டி மாஜிஸ்திரேட் நேரில் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றார்.
இதனடிப்படையில் அந்தோணிதாசன் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ)–பெண்ணை தாக்கி வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Average Rating