திருமண வயது வராததால் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்ற மாணவி!!
தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இவரது மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ் (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதலுக்கு சவுந்தர்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சவுந்தர்யாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சவுந்தர்யா இல்லை. பின்னர் விசாரித்ததில் சவுந்தர்யாவை கேரளாவுக்கு அழைத்து சென்று சுரேஷ் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வடிவேல் தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகனை கடத்தி சென்று சுரேஷ் திருமணம் செய்ததாக கூறினார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தர்யாவையும், அவரை கடத்தி சென்ற சுரேஷையும் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடியினர் நேற்று தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்பழகன் காதல் ஜோடியினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சவுந்தர்யாவுக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதால் அவர் மைனர் பெண் என்பது தெரியவந்தது.
இதனால் சவுந்தர்யாவிடம் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் காதலனுடன் செல்லமுடியாது. பெண்கள் காப்பத்துக்கு தான் அனுப்ப முடியும் என்று சவுந்தர்யாவிடம் போலீசார் அறிவுரை கூறினர். ஒரு பக்கம் பெற்றோர் கதறி அழுவதை கண்டும், போலீசாரின் அறிவுறுத்தலாலும் மனம் மாறிய சவுந்தர்யா காதலன் சுரேஷ் கட்டிய தாலியை கழற்றி அவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் வீட்டுக்கு சென்றார். இதனால் காதலன் சுரேஷ் ஏமாற்றம் அடைந்தார்.
Average Rating