6 வருடமாக காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சி: போலீசார் சமரசத்தால் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர்!!
ஆரணி அடுத்த தச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் கந்தசாமி (24). ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார்.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சத்யா (20). இருவரும் உறவினர்கள், கடந்த 6 வருடமாக கந்தசாமியும், சத்யாவும் காதலித்து வந்தனர். விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம் கந்தசாமி சத்யா வீட்டிற்கு சென்று வருவார். தற்போது 20 நாள் விடுமுறையில் கந்தசாமி ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கந்தசாமிக்கு வேறு ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதைப்பற்றி தெரிந்து கொண்ட சத்யா பெற்றோருடன் சென்று கந்தசாமிக்கு தன்னை திருமணம் செய்து வைக்கும் படி கூறினார். ஆனால் கந்தசாமியின் பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து சத்யா ஆரணி அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கந்தசாமி மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் இருதரப்பினரையும் சமரசம் செய்தார். அப்போது சத்யாவை திருமணம் செய்ய கந்தசாமி சம்மதித்தார். இதையடுத்து போலீசார் முன்னிலையில் அங்குள்ள வேம்புலியம்மன் கோவிலில் சத்யா கழுத்தில் கந்தசாமி தாலி கட்டினார்.
மணமக்களை பெற்றோர், போலீசார் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர்.
Average Rating