பர்கூர் வனப்பகுதியில் மாடு மேய்த்த தொழிலாளியை யானை மிதித்து கொன்றது!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஒண்ணக்கரை மலை கிராமத்தை சேர்ந்தவர் கெஞ்சப்பன்(வயது 60). விவசாயியான இவர் 7 மாடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று கெஞ்சப்பன் பர்கூர் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில் தனது மாடுகளை மேய்த்தார். இரவு 7 மணிக்கு மாடுகள் மட்டும் வீடு திரும்பின. மாடுகளை மேய்க்க சென்ற கெஞ்சப்பனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் தீப்பந்தங்களுடன் கெஞ்சப்பன் மாடு மேய்க்க செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சடேசாமி பாறை என்ற இடத்தில் உடல் நசுங்கிய நிலையில் கெஞ்சப்பன் பிணமாக கிடந்தார். மாடு மேய்க்க சென்ற கெஞ்சப்பனை காட்டு யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது.
இதுபற்றி பர்கூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கெஞ்சப்பன் உடலை வனவிலங்குகள் இழுத்து சென்றுவிடும் என கருதிய உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அடர்ந்த காட்டுக்குள் தீப்பந்தங்களுடன் இன்று அதிகாலை வரை விடிய விடிய காத்திருந்தனர்.
இன்று காலையில் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
யானை தாக்கி பலியான கெஞ்சப்பனுக்கு சின்னகொண்டை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
Average Rating