திருவட்டார் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!!
திருவட்டாரை அடுத்த ஆற்றூர் ஆக்கர்விளை பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது29). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது வீடு அருகே லோகிதாசின் சகோதரரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் லோகிதாசுக்கும், அவரது சகோதரர் மனைவிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இது தொடர்பாக லோகிதாசின் சகோதரர் மனைவி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதில் லோகிதாஸ் தன்னை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறி இருந்தார்.
இது தொடர்பாக திருவட்டார் போலீசார் நேற்று லோகிதாசை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் லோகிதாசின் மனைவி போலீஸ் நிலையம் சென்று கணவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் லோகிதாஸ் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இன்று காலை இறந்து போனார்.
போலீஸ் விசாரணைக்கு சென்றவர் விஷம் குடித்து திடீரென தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating