திருப்பதி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்: நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் குறித்து விசாரணை!!
ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், ராமாபல்லி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சவுமியா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சவுமியா நேற்று காலை திருப்பதியில் உள்ள அரசு பிரசவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதியம் 12 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் மாலை 4 மணியளவில் நர்ஸ் ஒருவர் அங்கு வந்து பிறந்த குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என கூறி குழந்தையை எடுத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் நர்ஸ் குழந்தையை மீண்டும் கொண்டு வரவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முனிராஜ் கேட்டார். அப்போது மருத்துவமனை சார்பில் யாரும் குழந்தையை எடுத்து செல்லவில்லை என கூறியுள்ளார். அப்போது நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனிராஜ் இதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் திருப்பதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கட்சியினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.
பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தகவல் அறிந்து வந்த அலிபெரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குழந்தையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating