களியக்காவிளை அருகே கார் டிரைவரை வெட்டிக் கொன்ற பிளஸ்–2 மாணவர்கள்!!
களியக்காவிளை அருகே உள்ள பூவாரைச் சேர்ந்தவர் சமீர் (வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பியவர். சமீபகாலமாக சமீர் சொந்த ஊரில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார்.
கடந்த வாரம் சமீர் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் 3 பிளஸ்–2 மாணவர்கள் வேகமாக வந்தனர்.
அவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே சமீர் அந்த மாணவர்களை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தெட்டிக்காடு பகுதியில் நேற்று முன் தினம் இரவு சமீர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஏற்கனவே தகராறு செய்த பிளஸ்–2 மாணவர்கள் 3 பேரும் அங்கு வந்து சமீரை வழி மறித்தனர். பிறகு தங்களிடம் இருந்த அரிவாளால் சமீரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் அலறியபடி சாய்ந்த சமீரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சமீர் நேற்றிரவு இறந்து போனார்.
இதுபற்றி பூவார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 மாணவர்களையும் தேடி வருகிறார்கள்.
Average Rating