கமுதி அருகே இளம்பெண் அடித்துக்கொலை: 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சின்ன உடப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகள்கள் மல்லிகா (வயது29), வீரவள்ளி.
மல்லிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வலம்புரி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. வலம்புரி கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
மல்லிகாவுக்கும், அவரது தங்கை வீரவள்ளிக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மோதிக்கொண்டனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பும் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்போது மல்லிகா, மண்டலமாணிக்கம் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் மல்லிகாவுக்கும், வீரவள்ளிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. வீரவள்ளிக்கு ஆதரவாக அவரது கணவர் வீரமணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராமர், இவரது மனைவி கற்பகவள்ளி, ராமரின் தம்பி ராஜா, இவரது மனைவி அம்பிகா, ராமரின் தாய் சரஸ்வதி, உறவினர் நாகவள்ளி ஆகியோரும் வந்துள்ளனர்.
பிரச்சினை முற்றியதில் இவர்கள் 8 பேரும் சேர்ந்து மல்லிகாவை உருட்டுக்கட்டை, கம்பியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மல்லிகாவின் தாயார் முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவள்ளி, வீரமணி உள்பட 8 பேரை தேடி வருகின்றனர்.
இன்று காலை சின்ன உடப்பன்குளம் கிராமத்திற்கு கொலை தொடர்பாக விசாரிக்க கமுதி போலீஸ் ஏ.எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் வந்தார். அப்போது அவரிடம், மல்லிகாவின் உறவினர்கள் கூறுகையில், போலீசார் அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் மல்லிகா கொலை செய்யப்பட்டு இருப்பதை தடுத்து இருக்கலாம் என்றனர்.
Average Rating