படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: விடுதி ஊழியர் கைது!!
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரேகா அகிர்வார் தனது கணவருடன் கோலாரில் வசித்து வருகிறார். இவர்களது 5 வயது, 7 வயது மகள்கள் போபாலில் அரசு உதவியுடன் நடைபெறும் பெண்கள் விடுதியில் சேர்ந்து இருந்தனர்.
சில நாட்களுக்கு முன் ரேகா விடுதிக்கு மகள்களை பார்க்க சென்றார். பின்னர் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
வீட்டில் 5 வயது சிறுமியை குளிக்க தாய் அழைத்துச்சென்றார். அப்போது சிறுமியின் தொடை உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் காணப்பட்டது. அது எப்படி ஏற்பட்டது என்று கேட்டபோது விடுதியில் பெண் ஊழியர் மெழுகுவர்த்தியில் சூடு போட்டு சித்ரவதை செய்ததாக கூறினார்.
இதைக்கேட்டு ஆவேசம் அடைந்த தாய் ரேகா விடுதிக்கு சென்று கேட்டார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் 5 வயது சிறுமி படுக்கையில் அடிக்கடி சிறுநீர் கழித்தார். அதை தடுக்கவே மெழுகுவர்த்தியால் சூடு போட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தாய் ரேகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி பெண் ஊழியர் கலாவதியை கைது செய்தனர். அவர் மீது சிறுவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Average Rating