ஜோலார்பேட்டையில் அமைச்சர் உதவியாளரின் தம்பி மர்ம சாவு!!
ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் வசுமதியின் கணவர் சீனிவாசன். இவர் அமைச்சர் வீரமணியிடம் உதவியாளராக உள்ளார். இவருடைய தம்பி விவேகானந்தன்(38). ஒப்பந்ததாரர். ஜோலார்பேட்டை அடுத்த சோலையூரில் வசித்து வந்தார். நேற்று மாலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இன்று காலை சோலையூர் ரெயில்வே கேட் அருகே இறந்து கிடந்தார். தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விவேகானந்தன் முகம், கையில் காயங்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் ஆகியவை பறிக்கப்பட்டிருந்தது. அவரது பைக் அருகே உள்ள பள்ளத்தில் கிடந்தது.
விவேகானந்தன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் விவேகானந்தன் விபத்தில் இறந்ததாக கூறினர். ஆனால் விவேகானந்தன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அ.தி.மு.க. பிரமுகரான விவேகானந்தன் நகராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வந்துள்ளார். இது சம்பந்தமாக முன்விரோதம் ஏற்பட்டு கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் விவேகானந்தன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.
ஜோலார்பேட்டை போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமாக இறந்த விவேகானந்தனுக்கு ஓவியா என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர். அமைச்சர் உதவியாளரின் தம்பி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating