சிவகங்கையில் திமுக செயலாளரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!
சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (வயது 37) சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் பேசியுள்ளார். ‘‘நீங்கள் எல்.ஐ.சி.யில் போட்டுள்ள பணத்திற்கான முதிர்வுத்தொகை ரூ.2.75 லட்சத்தை வாங்கி தருகிறோம். சென்னை தலைமை அலுவலகத்தில் பணியாற்றுவதால் நான் அனுப்பும் நபரிடம் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம், வங்கி கணக்கு, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து அனுப்புங்கள்’’ என்று அந்த பெண் கூறினார்.
இதன்படி மதுரையில் இருந்து ஜெயராமனிடம் ஒரு பெண் பேசியுள்ளார். பின்னர் அவர், பணம் மற்றும் ஆவணங்களை பெறுவதற்காக சிவகங்கை பஸ் நிலையத்தில் ஜெயராமனை சந்தித்தார். ‘‘தற்போது ரூ.10 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும், மீதி ரூ.30 ஆயிரத்தை பின்னர் தருவதாகவும்’’ கூறி ஜெயராமன் மதுரை பெண்ணிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பெண்ணை பின்னர் ஜெயராமன் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த ஜெயராமன், இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இது தொடர்பாக மதுரை சின்னக்கடை வீதி, உப்புக்கார தெருவை சேர்ந்த பாத்திமா நசீரா (27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது பாத்திமா நசீரா மதுரையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதும், சென்னையில் உள்ள இன்சூரன்ஸ் புரமோட்டர்ஸ் கம்பெனி ஒன்றின் பெண் ஊழியரான தண்டையார் பேட்டையை சேர்ந்த அனு (23) என்பவர் ஜெயராமனிடம் பணம் வாங்க அனுப்பியதும் தெரியவந்தது. இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட பாத்திமா நசீராவை போலீசார் கைது செய்தனர். அனுவை தேடி வருகிறார்கள்.
Average Rating