7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார்!!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி டெல்லி வரவுள்ள நிலையில் அவரிடம் 130 கோடி டாலர்கள் பணம் கேட்டு இ-மெயில் அனுப்ப முயன்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள ஆலய நகரமான போதி கயாவில் உள்ள இண்டர்நெட் மையத்துக்கு வந்த ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்று கூறி மையத்தின் உரிமையாளரின் அனுமதி பெற்று ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்தார்.
உஷார் அடைந்த மையத்தின் உரிமையாளர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், இனாம் ராஜா (49) என்ற சந்தேகத்துக்குரிய அந்நபரை உடனடியாக கைது செய்தனர். அவர்கள் வந்து சேருவதற்குள் ஒபாமாவுக்கு 2 பக்க அளவுக்கு ஒரு நீண்ட கடிதத்தை அந்நபர் உருது மொழியில் தயாரித்திருந்தார்.
தேசிய நிவாரண நிதிக்கு 130 கோடி டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 7800 கோடி ரூபாய்) அனுப்புமாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பெல்லார் சக் கிராமத்தைச் சேர்ந்த அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல் காணப்படுவதாக போலீசார் கூறுகின்றனர். அவரிடமிருந்து ராஞ்சி மனநல மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்ட சில மாத்திரை ரசீதுகளும் கிடைத்துள்ளன என தெரிய வருகின்றது.
எனினும், இவ்விவகாரத்தின் தன்மை கருதி மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவினருக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது. அதே வேளையில், இனாம் ராஜாவின் சொந்த கிராமத்துக்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார், அவரது பூர்வீகம் தொடர்பான தகவல்களைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.
Average Rating