கப்பல் ஊழியரின் மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது!!
காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரி பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (47). விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் இழுவை கப்பல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் காரைக்காலில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு விட்டு பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பின்னர் துரைசாமி தனது மகளுடன் ஒரு மோட்டார் சைக்கிளிலிலும், மனைவி ஆனந்தி தனியாக ஒரு ஸ்கூட்டரிலும் சென்றனர்.
அவர்கள் காரைக்கால் வானொலி நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் ஆனந்தியின் கழுத்தில் இருந்த சுமார் 10 பவுன் எடையுள்ள தங்க நகையை அறுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். ஆனந்தியிடம் நகையை அறுத்துக்கொண்டு ஓடியது காரைக்கால் தருமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாபு (27) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் நேற்று வீட்டருகே பதுங்கி இருந்த பாபுவை பிடித்து வந்து விசாரணை செய்த போது அவர் நகையை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். எனவே அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகையையும், வழிப்பறி செய்ய பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
Average Rating