ஆங்கில மீடியத்தில் பாடங்கள் புரியாததால் விரக்தி: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையப்பன் கோவில் ஏழுகாணியூரை சேர்ந்தவர் மரிய மாணிக்கம். இவரது மகன் மனோஜ் (வயது 18). இவர் கோவை அருகேயுள்ள சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். மனோஜ் 12–ம் வகுப்பு வரை புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்து வந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் பெற்றோர் மனோஜை கோவை கல்லூரியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்தனர். வகுப்பில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் நடத்தும் பாடங்கள் புரியாமல் மனோஜ் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார். இதன் காரணமாக அவருக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மனோஜ் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு ஆங்கில மீடியத்தில் படிக்க முடியவில்லை. ஊருக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு அவரது பெற்றோர் பணம் கட்டிவிட்டோம். அங்கு தான் படிக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இதனால் வேறு வழியில்லாமல் விரக்தியில் படிப்பை தொடர்ந்தார். இந்த நிலையில் கல்லூரி விடுதி அறையில் தனியாக இருந்த மனோஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வகுப்பு முடிந்து அறைக்கு திரும்பிய அவரது நண்பர்கள் அறைக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததை பார்த்தனர். அவர்கள் மனோஜை பலமுறை அழைத்தும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது மனோஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சூலூர் போலீசார் விரைந்து வந்தனர். அறைக்கதவை உடைத்து மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating