டெல்லியில் உபேர் டாக்சியை மீண்டும் இயக்க திட்டம் : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிருப்தி!!
டெல்லி உட்பட பல மாநிலங்களில் இயங்கி வந்த அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் ‘உபேர்’. கடந்த டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார்.
அவரது புகாரின் பேரில், அந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (32) கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்குப் பிறகு உபேர் ஆன்லைன் டாக்சி நிறுவனத்திற்கு பல மாநிலங்கள் தடை விதித்தது.
ஆனால் சில தினங்களுக்கு முன் தனது சேவையை மீண்டும் டெல்லியில் தொடங்க முடிவு செய்த அந்நிறுவனம், இந்த செய்தியை தனது வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தது. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கும் இந்த இ-மெயில் கிடைத்துள்ளது. இதைப் பார்த்த அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து உபேர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர உதவிய அமெரிக்க வழக்கறிஞர் டக்ளஸ் விட்கரிடம் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
உபேர் நிறுவனம் லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும், இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் நடக்க கூடாது என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் உட்பட அனைவரின் விருப்பமாக உள்ளது.
இதற்கிடையே, உபேர் நிறுவனத்திற்கு டெல்லியில் தடை நீடிப்பதாகவும், உரிய லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்க முடியாது என்றும் டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating