களக்காடு அருகே பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது!!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பெல்ஜின். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவிஜெயசீலி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அதே ஊர் நடுத்தெருவை சேர்ந்த துரை மனைவி சாந்தி (வயது 35).
நேற்று மதியம் ஜெயசீலி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த சாந்தி, ஜெயசீலியிடம் நீ எனது கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி,அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெயசீலி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ஜெயசீலி இறந்தார்.
இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் சாந்தி மிரட்டல் விடுத்ததின் காரணமாக ஜெயசீலி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சாந்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Average Rating